“பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்க அவசரச் சட்டம்” - கேரள அரசு முடிவு
கேரளாவில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அம்மாநிலத்தின் ஆளுநர் பல்கலைக்கழக வேந்தராகச் செயல்படுகிறார்.
இந்நிலையில் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களை ‘பல்கலைக்கழகத்தின் வேந்தராக’ நியமிக்கும் அவசரச் சட்டத்தைக் கொண்டு வர கேரள அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் அம்மாநில ஆளுநர் கெளரவப் பொறுப்பு என்ற முறையில் பல்கலைக்கழகத்தின் வேந்தராகச் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் வேந்தர் என்ற முறையில், கேரளப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு ஆளுநர் கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அதில் பதவி நீக்கம் செய்ய முடிவெடுத்து அவர்களைப் பதவியிலிருந்து வெளியேறுமாறு கூறப்பட்டு இருந்தது. இதனை முதல்வர் பினராயி விஜயன் மட்டுமின்றி கேரளத்தின் எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டித்தனர்.
இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கூடிய கேரள அமைச்சரவை, மாநிலத்தின் 14 பல்கலைக்கழகங்களிலும் வேந்தர் பொறுப்பில் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களை நியமிப்பதற்கான அவசரச் சட்டத்தைக் கொண்டு வருவது என முடிவு செய்துள்ளது.
“மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக வேந்தர் பதவி தொடர்பான விதிகளில் திருத்தம் மேற்கொள்வதே இந்த அவசரச் சட்டத்தின் நோக்கம். மாநிலத்தின் ஆளுநர் என்பவர்,
மாநிலத்தின் பல்கலைக்கழகங்களுக்குத் தாமாகவே வேந்தர் என்ற பொறுப்புக்கு வருவார் என்று உள்ள பல்கலைக்கழக விதிகளை இந்த வரைவு அவசரச் சட்டம் நீக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.